300 பேரிடம் செயின் பறித்த ஆந்திர திருடன் - தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே, 300க்கும் அதிகமானோரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஓஜிலி மண்டலம் ஆர்மேனிபாடு பகுதியை சேர்ந்த சிவகுமார் (32), ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சாலையில் தனியாக செல்லும் பெண்களை வழிமறித்து செயின் பறிப்பது உள்ளிட்ட சுமார் 300 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர, அவர் மீது பல இடங்களில் தகராறு செய்தது உட்பட 400 வழக்குகள் உள்ளது. சிவக்குமாரை ஆந்திர போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் அடுத்த ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சம்ஷாபாத் விமான நிலையம் அருகே சிவக்குமார் பதுங்கி இருப்பதாக சைபராபாத் பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக நேற்று காலை அந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த சந்தேகத்திற்கிடமான வாலிபர் போலீசாரின் சோதனைக்கு நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் துரத்தி சென்று பைக்கை மடக்கி பிடித்தனர்.
அப்போது, போலீசாரை அந்த வாலிபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரலு மற்றும் 2 போலீசார் காயமடைந்தனர். வெங்கடேஸ்வரலுவின் கை, வயிற்றின் பல பகுதிகளில் வாலிபர் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த வெங்கடேஸ்வரலு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதனால், தற்காப்பு நடவடிக்கையாக அந்த வாலிபரை இன்ஸ்பெக்டர் நரசிம்மா ரெட்டி துப்பாக்கியால் சுட்டார். அதில், வாலிபர் மீது குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபர் போலீஸ் தேடிய திருடன் சிவக்குமார் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த் கூறுகையில், ‘‘கொல்லப்பட்ட சிவக்குமார், கொள்ளை மூலம் கிடைத்த பணத்தில் விலை உயர்ந்த அடுக்குமாடிகளில் தொழிலதிபர் போல் வசித்து வந்துள்ளான். அவன் எந்த பகுதியில் வாடகை வீட்டில் இருந்தாலும், 3 அல்லது 4 மாதங்கள் வரை மட்டுமே தங்குவது வழக்கம். அவரது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே விலை உயர்ந்தது. இவர் தற்போது, நார்சிங் பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
சிவக்குமாரின் தாக்குதலில் படுகாயமடைந்த வெங்கடேஸ்வரலு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.