கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை: முக்கியக் குற்றவாளி சரண்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மனோஜ் படுகொலை வழக்கில் விக்ரமன் என்பவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தலசேரி கதிரூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் . ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி. இவர் கடந்த 1-ந்தேதி காரில் சென்றபோது, ஒரு கும்பல் வழிமறித்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனோஜை கொன்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
திடீர் சரண்!
கேரளா அரசும் இதனை ஏற்று மனோஜ் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் மனோஜ் கொலையில் தலசேரி பகுதியைச் சேர்ந்த 8 பேர் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை கேரள போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை தேடி வந்த நிலையில் நேற்று கண்ணூர் நீதிமன்றத்தில் போலீஸ் தேடிய முக்கிய குற்றவாளியான விக்ரமன் என்பவர் சரண் அடைந்தார்.
நீதிமன்றத்துக்கு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவர், நேராக கண்ணூர் மாஜிஸ்திரேட் முன்பு சென்று மனோஜ் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதால் சரண் அடைவதாக கூறினார்.
அவரை 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து சரண் அடைந்த விக்ரமன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ஜெயராஜனை கொல்ல முயன்ற வழக்கில் மனோஜ் முக்கிய குற்றவாளி என்பதால் அவரை குண்டுவீசி கொன்றதாக தெரிவித்தார்.