வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி – சி 24 ராக்கெட்
ஸ்ரீ ஹரிகோட்டா: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது நேவிகேஷன் செயற்கைக்கோளுடன், பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.
கடந்த ஜூலை 1-ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.14 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான 58½ மணிநேர ‘கவுண்ட்டவுன்' கடந்த 2ம் தேதி காலை 6.44 மணிக்கு தொடங்கியது
சீறிப்பாய்ந்த ராக்கெட்
இன்று மாலை 5.14 மணிக்கு கவுண்டவுன் முடிந்தவுடன் சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைகோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
விஞ்ஞானிகள் உற்சாகம்
பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும், சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் கூடியிருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரலாற்றில் 24-ஆவது தொடர் வெற்றி எனவும், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இரண்டாவது செயற்கைக்கோள்
இந்தியா அனுப்ப உள்ள 7 வழிகாட்டு செயற்கைக்கோள்களில் தற்போது அனுப்பப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி, இரண்டாவது செயற்கைக் கோள் ஆகும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைகோள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஏவப்பட்டது.
கண்காணிப்பு பணியில்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைகோளால் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.
இன்னும் இரண்டு செயற்கைக்கோள்கள்
1432 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும். இந்த ஆண்டு இன்னும் இரண்டு வழிகாட்டி செயற்கைகோள்கள் ஏவப்பட உள்ளன.
5 வது இடத்தில் இந்தியா
தன்னிலையாக ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து, அதனை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் படைத்த நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக IRNSS (Indian Regional Navigational Satellite System) என்ற திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ செயல்படுத்திவருகிறது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி24 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது என்றும் புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ஐஆர்என்எஸ்எஸ்- 1பி செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி24 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்தியா தனது 2-வது கண்காணிப்பு செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு விஞ்ஞானிகள், அதிகாரிகளுக்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.