கட்டண உயர்வு: ரயில்வே அமைச்சர் முடிவு சரியானதே- அருண் ஜெட்லி
டெல்லி: ரயில் கட்டண உயர்வு என்பது கடினமான சுமைதான். ஆனால் ரயில்வே அமைச்சர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நேற்று ரயில் கட்டண உயர்வை அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா என பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரயில்வே அமைச்சரின் முடிவு மிகவும் சரியானதே என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சரக்குக் கட்டண வருவாயினால் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் இன்று சரக்குக் கட்டணமும் நெருக்கடிக்கு வந்துள்ளது.
எனவேதான் இந்த கட்டண உயர்வு. ரயில் கட்டணங்களை உயர்த்தாமல் கடன் பொறியில் சிக்குவதா அல்லது ரயில் கட்டணங்களை உயர்த்துவதா என்ற இரட்டை நிலையில் அரசு நல்ல முடிவையே மேற்கொண்டுள்ளது.
உயர்தரமான, உலகத் தரம் வாய்ந்த ரயில்வே வேண்டுமா அல்லது மோசமான ரயில்வே வேண்டுமா என்பதை அரசு தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.
ஆகவே, ரயில்வே அமைச்சர் கடினமான, ஆனால் சரியான முடிவையே எடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
எனவே பயணிகள் தாங்கள் பெறுகின்ற வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் கொடுப்பதினால் மட்டுமே இந்திய ரயில்வே தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.