நாடு முழுவதும் பரவப் போகும் அம்மா உணவகங்கள்...!
ஜெய்ப்பூர்: தமிழகத்தில் மாநகரங்களில் அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படும் அம்மா உணவகம் இப்போது பல்வேறு மாநிலங்களுக்கும் பயண்படவுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் இதேபோன்ற மலிவு விலை உணவகங்களைத் தொடங்க அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா திட்டமிட்டுள்ளாராம்.
மக்களுக்கான திட்டங்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார், சமீபத்தில் பெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த வசுந்தரா. அதில் முக்கியமான திட்டமாக அம்மா உணவகம் போல ராஜஸ்தானிலும் நிறுவ திட்டமிட்டுள்ளாராம்.

விறுவிறு ஆய்வு
தமிழகத்தில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுவது எ்ப்படி, அதை ராஜஸ்தானில் எப்படி நிறுவலாம், என்னென்ன உணவு வகைகளைத் தரலாம் என்பது குறித்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிள் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறதாம்.

சென்னை வந்து நேரில் ஆய்வு
இதுதொடர்பாக சென்னைக்கு ஒரு குழுவினர் நேரில் வந்து அம்மா உணவகங்களில் நேரடியாக ஆய்வு நடத்தியுள்ளனராம்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அழைப்பு
அம்மா உணவகங்களை நேரில் பார்த்த குழுவின் தலைவரான ராஜஸ்தான் உள்ளாட்சிகளுக்கான இயக்குநர் கே.கே.சர்மா கூறுகையில், இந்த கேன்டீன்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நேரில் பார்த்துள்ளோம். எங்களுக்கு உதவ ஜெய்ப்பூருக்கு வருமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

நாடு முழுவதும் பலரும் ஆர்வம்
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் கூடுதல் சுகாதார அதிகாரி டாக்டர் டிஜி தங்கராஜன் கூறுகையில், நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்து அம்மா உணவகத்தின் வெற்றி, செயல்பாடுகள் குறித்து பலரும் விசாரிக்கிறார்கள். ஹைதராபாத், ஜெய்ப்பூரிலிருந்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றார்.

ஹைதராபாத்- மும்பையிலும் வருமா
இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் தவிர ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் இதேபோன்ற உணவகங்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட நகரங்களின் நிர்வாகங்கள் ஆர்வமாக இருக்கின்றனவாம்.












Click it and Unblock the Notifications