ஓடும் ரயிலில் பயணியின் விரலைக் கடித்த எலி... ரூ. 13000 நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
எர்ணாகுளம்: ஓடும் ரயிலில் எலிக்கடிக்கு ஆளான பயணிக்கு, ரயில்வே நிர்வாகம் ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சி.ஜே.புஷ். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி இவர், துரந்தோ விரைவு ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடன்கூடிய பெட்டியில் மும்பையிலிருந்து ஏர்ணாகுளத்துக்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது அதிகாலை 4.30 மணியளவில் புஷ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது, ரயில் பெட்டிக்குள் சுற்றித் திரிந்த எலி ஒன்று, அவரது இடது கை ஆள்காட்டி விரலைக் கடித்தது. வலியால் அலறித் துடித்து கண் விழித்துப் பார்த்த புஷ், கை விரல் எலிக் கடித்து ரத்தம் வடிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்தார். ஆனபோதும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் எலிக்கடிக்கு அவர் சிகிச்சை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, எலிக் கடியால் ஏற்பட்ட மருத்துவச் செலவிற்கு நஷ்ட ஈடு தரக்கோரி, புஷ் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில், ரயில்வே நிர்வாகம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் மனுதாரருக்கு ரூ.13 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.