500 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிடும் ஆர்பிஐ... அப்போ 2000 ரூபாய் நோட்டுக்கு மங்களம்?
2000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக மங்களம் பாடி விடலாம் என்று முடிவோடு இருப்பதாக தெரிகிறது. எனவேதான் 500 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக அச்சிட முடிவு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
Recommended Video
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை கடந்த டிசம்பர் மாதமே ரிசர்வ் வங்கி படிப்படியாக நிறுத்தி விட்டது. 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வைத்துள்ளது. மேலும் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உயர்பணமதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஆய்வறிக்கை பகீர் தகவலை வெளியிட்டது.
கடந்த டிசம்பர் மாதம் லோக்சபாவில் ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரப்படி, கடந்த 2017 மார்ச் மாதம் வரை 3.5 லட்சம் கோடி என்கிற அளவில் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதே சமயம் டிசம்பர் 8ம் தேதிப்படி, 13.32 லட்சம் கோடி உயர் மதிப்புடைய நோட்டுகள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் லோக்சபாவில் வெளியிடப்பட்ட நிதித்துறையின் ஆய்வறிக்கையின் படி, டிசம்பர் 8ம் தேதி வரை, புதியதாக 1,695 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 365 கோடி 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த ரூபாய் மதிப்பு 15.78 லட்சம் கோடி ஆகும்.
ஏற்கனவே புழக்கத்தில் இருப்பது 13.32 லட்சம் கோடி ரூபாய், அச்சடிக்கப்பட்டது 15.78 லட்சம் கோடி ரூபாய் எனில் இன்னமும் 2.46 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வெளியிடாமல் ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்து உள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், மீதம் இருக்கும் நோட்டுகளையும் வெளியிட்டால் அதிக சில்லறை தட்டுப்பாடு வரலாம் என்று கருதி ஆர்.பி.ஐ வங்கி உயர் மதிப்பு நோட்டுகளை வெளியிடாமல் வைத்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் அந்த தகவல்கள் வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக ஏடிஎம்களில் வருவது நின்று போனது. 100 ரூபாய், 500 ரூபாய் மட்டுமே அதிக அளவில் ஏடிஎம்களில் கிடைத்தன. அது பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில நாட்களாக ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு நிலவுகிறது.
ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாட்டை தீர்க்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 2 நாட்களில் நாளொன்றுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட நிதித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் ரூ.7,500 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என மத்திய நிதித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டு 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதில் கவனம் செலுத்தியது. ஆனாலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட மாட்டாது என்றே மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறி வந்தன. இப்போது 2000 ரூபாய் நோட்டுக்களை கண்ணிலேயே பார்க்க முடியவில்லை. கட்டு கட்டாக பதுக்கி வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டை எல்லாம் என்ன செய்யப் போறாங்க பாஸ். இது அறிவிக்கப்படாத பணமதிப்பு நீக்கமாவுள்ள இருக்குப்பா என்று அங்கலாய்க்கிறார்கள் பொதுமக்கள்.