இது வெறும் ஆரம்பம்தான்.. முகுல் ராயை வளைத்த.. மம்தாவின் சீக்ரெட் "வேட்டையன்" ஆபரேஷன்.. தடுமாறிய பாஜக
கொல்கத்தா: கடந்த 40 நாட்களாக தொட்டதெல்லாம் வெற்றி என்று அடுத்தடுத்து மேற்கு வங்க அரசியலிலும், தேசிய அரசியலிலும்மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாஸ் காட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலும் இன்று மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் முகுல் ராய் "மீண்டும்" திரிணாமுல் கட்சியில் இணைந்தது எல்லாம் மம்தா செய்த மிகப்பெரிய அரசியல் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க தேர்தலில் இமாலய வெற்றிபெற்றது, பிரதமர் மோடி நடத்திய யாஸ் புயல் மீட்டிங்கை தன்மானத்திற்காக புறக்கணித்தது, மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை டெல்லி அனுப்ப மறுத்து, அவரை பதவியில் இருந்தே விலக வைத்து தனக்கு ஆலோசகராக நியமித்தது என்று மம்தா பானர்ஜி கடந்த 40 நாட்களாக தேசிய அரசியலில் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை நிகழ்த்திவிட்டார்.
அதில் தற்போது நிகழ்த்தப்பட்ட "சம்பவம்"தான் முகுல் ராய் மீண்டும் தனது தாய் வீடான திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பியது!
மம்தாவை சந்தித்தார் முகுல் ராய்.. திரிணாமுல் காங்.கில் சேர்ந்தார்.. மே.வங்கத்தில் உச்சகட்ட திருப்பம்
என்ன நடந்தது?
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரான சுவேண்டு அதிகாரியின் மொத்த குடும்பமும் அவருடன் சில சிறிய தலைவர்களும் மொத்தமாக பாஜகவில் ஐக்கியம் ஆனார்கள். திரிணாமுல் கதை முடிந்தது, அவ்வளவுதான் மேற்கு வங்கத்தில் அந்த கட்சி இனி வெற்றிபெறாது, மம்தா என்னும் சகாப்தம் முடிந்தது என்றெல்லாம் பேச்சுக்கள் அடிப்பட்டன.. மேற்கு வங்கத்தில் அதிகாரி குடும்பத்தை பாஜக வளைத்த அதே நேரத்தில்தான் மம்தாவும் சத்தமின்றி சீக்ரெட் ஆப்ரேஷன் ஒன்றை நடத்தி வந்து இருக்கிறார்.
சீக்ரெட் ஆப்ரேஷன்
"திரும்பி வரும் வேட்டையன்" என்று பொருளப்படும் வகையில் 'return of the prodigals' என்ற ஆபரேஷனை முதல்வர் மம்தா பானர்ஜி சத்தமே இன்றி நடத்தி இருக்கிறார். அதில் மம்தா குறி வைத்த முதல் நபர்தான் முகுல் ராய். 2017 வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய இரண்டாம் கட்ட தலைவராக இருந்தவர். கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவரைத்தான் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் பாஜக தங்கள் பக்கம் இழுத்தது.
லோக்சபா தேர்தல்
இது லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மேற்கு வங்கத்தில் ஒரு வகையில் உதவியாகவும் இருந்தது. அந்த கட்சி 18 இடங்களில் லோக்சபா தேர்தலில் வெல்ல முகுல் ராய் வரவும் காரணமாகவும் இருந்தது. ஆனால் இப்போது அதே முகுல் ராயை மம்தா பானர்ஜி முறையாக திட்டமிட்டு தட்டி தூக்கி இருக்கிறார். உங்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை.. நீங்கள் அங்கே இருந்தால் ஆமாம் சாமிதான் போட வேண்டும். அதிகாரி குடும்பத்திற்கு தரும் மதிப்பை கூட உங்களுக்கு கொடுக்கவில்லை என்று முகுல் ராயிடம் மம்தா தரப்பு பேசியதாக கூறப்படுகிறது.
என்ன சொன்னார்
அதேபோல் முகுல் ராயும், தனக்கு பாஜகவில் பெரிய வாய்ஸ் இல்லை, கட்சிக்கு வர சொல்லுவிட்டு ஓரம் கட்டுகிறார்கள். "என்னால் மூச்சு விட முடியவில்லை" என்று பாஜகவில் இருப்பது குறித்து புலம்பி இருக்கிறார். முகுல் ராயின் மனநிலை புரிந்து கொண்டு கடந்த 3 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக நூல் விட்டு, அவரை மம்தா பானர்ஜி தற்போது கட்சியில் சேர்த்து இருக்கிறார். இன்று திரிணாமுலுக்கு திரும்பியவர்.. தனது பழைய அறையை கட்சி அலுவலகத்தில் பார்வையிட்டு இருக்கிறார்.
பிளான் என்ன
இவரை கட்சியில் மீண்டும் கொண்டு வரும் முடிவு 3 மாதம் முன்பே எடுத்துவிட்டார்களாம். தேர்தலில் திரிணாமுல் வென்றால் மீண்டும் வருவதாக முகுல் ராய் உறுதி அளித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்திலும் முகுல் ராய் சில ரகசிய "உதவிகளை" மம்தாவிற்கு செய்திருக்கிறாராம். அரசியல் ராஜதந்திரத்தோடு செயல்பட்டு, ஒரு சின்ன வார்த்தை கூட வெளியே கசியாமல் மம்தா பானர்ஜி இப்படி காய் நகர்த்தி இருக்கிறார்.
மம்தா பானர்ஜி முடிவு
அதிலும் கடந்த டிசம்பரிலேயே அதிகாரி குடும்பம் மீது மம்தாவிற்கு சந்தேகம் வந்துவிட்டதால்.. முகுல் ராய் குறித்து யாரிடமும் வாயை திறக்காமல், 2-3 நிர்வாகிகளுக்கு மட்டும் தெரியும் வகையில் சீக்ரெட்டாக காய் நகர்த்தி உள்ளனர். 3மாதமாக முகுல் ராயிடம் பேசி, அவர் மூலம் இன்னும் பல பாஜக தலைவர்களை சமாதானம் செய்து, முதலில் முகுல் ராய், பின் மற்றவர்கள் என்ற திட்டத்துடன் இந்த 'return of the prodigals' ஆபரேஷனை நிகழ்த்தி இருக்கிறார்களாம்.
அமித் ஷா
மற்ற மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தலைவர்களை அள்ளி போட்டு, அரசியல் சாணக்கியர் பட்டம் பெற்ற அமித் ஷாவே ஆடிப்போகும் அளவிற்கு மம்தா சத்தமின்றி செயல்பட்டு இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயமே.. முகுல் ராய் ஒரு தொடக்கம்.. இட்ஸ் ஜஸ்ட் ஏ பிகினிங் என்று அஜித் போல திரிணாமுல் கட்சியினர் சொல்கிறார்கள். பாஜகவில் இருக்கும் 18 எம்பிக்களில் பலர் திரிணாமுல் கட்சிக்கு வர போகிறார்கள்.
இன்னும் பலர்
பாஜக எம்எல்ஏக்கள் பலர் கொத்தாக திரிணாமுல் வர போகிறார்கள். முகுல் ராய் தொடக்கம் மட்டுமே.. முக்கியமாக "அதிகாரியை" நம்பி வெளியே போனவர்கள் எல்லாம் மீண்டும் திரிணாமுல் வர போகிறார்கள் என்று கூறப்படுகிறது. 2024ல் தேசிய அரசியலில் குதிக்கும் முடிவில் மம்தா இருக்கிறார். அதற்கான ஒவ்வொரு அடிகளையும் அவர் அதிரடியாக எடுத்துவைத்துக்கொண்டு இருக்கிறார்.
குகை
சிங்கத்திடம் மோத காட்டுக்கு செல்ல கூடாது.. அதன் குகைக்கே செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு, நேராக பாஜகவிற்கு எதிராக பாஜகவின் அரசியலையே கையில் எடுத்துள்ளார். அதீத அதிகாரம், அரசியல் சாணக்கியத்தனம் என்று பாஜகவிற்கு கொஞ்சமும் குறையாத வேகத்தை மமதா கடந்த சில மாதங்களாக காட்டி வருகிறார். முகுல் ராய், சுப்ரான்ஷு ராய் திரிணாமுலில் இணைந்தது தொடக்கமே.. ராஜீப் பானர்ஜி, பிரபிர் கோஷல் போன்றவர்கள் விரைவில் மீண்டும் திரிணாமுல் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
எம்எல்ஏ
தொடர்ந்து பலர் பாஜகவில் இருந்து வெளியேற உள்ளதால், பாஜகவின் பலம் மேற்கு வங்க சட்டசபையிலும் கண்டிப்பாக குறைய போகிறத என்கிறார்கள்.. ராஜ்யசபாவிலும்! மோடியின் அதிகாரத்தை கைப்பற்றுவதே இலக்கு என்று தேர்தலில் நேராக சவால் விட்டவர் மம்தா. அதற்கான ஒவ்வொரு அடிகளை வேகமாக மம்தா எடுத்து வைக்கிறார்... மம்தாவின் இந்த அரசியல் அதிரடி பாஜகவிற்கு பெரிய பாடம்.. சிந்தியா, பிரசாத போன்றவர்களை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் காங்கிரசுக்கோ இது அரசியல் ஸ்பெஷல் கிளாஸ்!