பரபரப்பு அரசியல் சூழலில் சசிகலா சீராய்வு மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை! நீதிபதி அமர்வில் மாற்றம்
டெல்லி: சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு சீராய்வு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ம்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானபோது சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு அன்று விசாரணைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
அமர்வில் மாற்றம்
இதற்கு காரணம், நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாற்றம்தான். சசிகலாவின் சீராய்வு மனுவை நீதிபதிகள் அமிதவராய் கோஷ், ரோஹின்டன் நாரிமன் அமர்வு விசாரிக்கவிருந்தது.
தானாக விலகிய நீதிபதி
ஆனால், ரோஹிண்டன் நாரிமனின் தந்தை பாலி நாரிமன் (காவிரி வழக்கில் கர்நாடகாவிற்காக ஆஜராகுபவர்) ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா-சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்புக்காக ஆஜரானவர். இதனால் ரோஹிண்டன் நாரிமன், இவ்வழக்கிலிருந்து தன்னைவிடுவித்துக்கொண்டார். எனவே விசாரணை தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயிருந்தது.
22ல் விசாரணை
இதனிடையே, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 22ம் தேதி, அதாவது வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு
அமிதவராய் கோஷ் மற்றும் போப்டே ஆகிய நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்க உள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அணிகள் இணைய உள்ள நிலையில், சொத்துக்குவிப்பு சீராய்வு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.