நீதிபதி லோயா மர்ம மரண வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்!
நீதிபதி லோயா மர்ம மரண வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்ச் விசாரணை நடத்துகிறது.
டெல்லி: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மும்பை, நாக்பூர் நீதிமன்றங்களில் இருந்து நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
குஜராத் போலீசாரால் 2005-ம் ஆண்டு சோராபுதீன் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
நீதிபதி லோயா மர்ம மரணம்
இவ்வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த தற்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
நீதிபதி லோயா மரணத்தில் சர்ச்சை
இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதியால், சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார். நீதிபதி லோயா மரணம் குறித்து அண்மையில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஜூனியர் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
தீபக் மிஸ்ரா பெஞ்ச் விசாரணை
இதனால் நீதிபதி லோயா மர்ம மரண வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி அருண் மிஸ்ரா பெஞ்ச் விலகியது. இவ்வழக்கு தற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த விசாரணையின் போது, மும்பை, நாக்பூர் நீதிமன்றங்களில் நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா அரசும் மனுதாரர்களும் தேவையான ஆவணங்களை பிப்ரவரி 2-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது,.