டெல்லி குண்டுவெடிப்பு- புல்லாரின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்தர் பால் சிங் புல்லாரின் மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
1993ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெ்டிப்பு வழக்கில் கைதானவர் புல்லார். இவருக்கு விசாரணைக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி டெல்லியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ளது இந்த அலுவலகம். குண்டுவெடிப்பில் 9 பேர் இறந்தனர். அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்ஜித் சிங் பிட்டாவைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட புல்லார், கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அது வெகு காலத்திற்குப் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. பின்னர் அது நீண்ட தாமதத்திற்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து புல்லார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு புல்லார் கோரியபடி ஆயுள் தண்டனையாக மரண தண்டனையை மாற்ற முடியாது என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சீராய்வு மனு ஒன்றை புல்லார் தரப்பு தாக்கல் செய்தது. அது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மனு மீது இன்று நீதிபதிகள் அளித்த உத்தரவின்போது, மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் புல்லாரின் மன நலம் குறித்து அறிக்கைத் தாக்ல் செய்யுமாறும் அவர்கள் உத்தரவிட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கும் இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
விசாரணை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் புல்லாரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டபோது, மன நல பாதிப்பு, வலிப்பு நோய் உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோர முடியும் என்று கூறியிருந்தது.
புல்லார் கருணை மனு மிகவும் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதை மட்டும் புல்லார் தரப்பு காரணமாக காட்டவில்லை. மாறாக அவருக்கு மன நல ரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.