இந்தியாவில் பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: இஸ்ரோ மாதவன் நாயர் வருத்தம் !
ஹைதராபாத்: தொழிற்சாலைகளில் பொருட்களை தயாரிப்பது போல இந்தியாவில் உள்ள பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் கல்வி முறை சரியானதாக இல்லை. தொழிற்சாலைகளில் பொருட்களை தயாரிப்பதில் எப்படு அணுகுமுறை உள்ளதோ அதைப் போல் மாணவர்களிடம் பள்ளிகளின் அணுகுமுறை உள்ளது. இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இல்லை. அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. மாணவர்கள் நேரடியாக ஆய்வகங்களில் சோதனையில் பங்குபெறும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.சமீப காலங்களாக இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால் ஆராய்ச்சிப் பணிகளில் ஒன்றுமே மேற்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழகங்களில் நல்ல தரமான ஆய்வுக்கூடங்கள் இல்லாத போது நல்ல ஆராய்ச்சியை காண முடியாது. பல்கலைக்கழக அளவில் இருந்தே ஆராய்ச்சிகள் ஆரம்பமாக வேண்டும்.
ஆனால், இங்கு பிஎச்.டி யை பெறவே 5 ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் கூட முறையான வேலை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் சம்பளம் அதிகம் கிடைக்கும் மற்ற வேலைகளுக்கு சென்று விடுகிறார்கள். சீனா நம்மை விட ஆராய்ச்சியில் முன்னேறி சென்றுவிட்டது. அங்கு பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்ல்கப்படுகின்றன. மாணவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று மாதவன் நாயர் தெரிவித்தார்.