"சகிப்பின்மை"... ஆமீர்கானுக்கு எதிராக உ.பி கோர்ட்டில் தேசதுரோக வழக்கு
உத்தரபிரதேசம்: சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மனோஜ் குமார் தீட்சித் என்ற வழக்கறிஞர் கான்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஆமீர்கானுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஆமீர்கான் தனது பேச்சின் மூலம் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிப்பதாகவும், இளைஞர்களின் மனதில் அவர் தவறான எண்ணங்களை உருவாக்க முயற்சிப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆமீன்கானுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள ஆமீன்கான் வீட்டின் முன்பாக திரண்ட இந்து சேனா அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால் ஆமீர்கான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என மகாராஷ்ர மாநில சுற்றுசுழல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, தலைநகர் டெல்லியில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீன்கான் இந்தியாவில் நிலவும் சூழலை கண்டு தனது மனைவி கிரண் அஞ்சுவதாகவும் வெளிநாட்டுக்கு சென்று விடலாமா என அவர் தன்னிடம் கேட்டதாகவும் கூறினார். நாட்டின் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதேயே இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். ஆமீர்கானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பிறந்ததற்காக தாம் பெருமை கொள்வதாக ஆமீர்கான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, " இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஒரு இந்திய குடிமகனான எனக்கு இங்கு வாழ்வதற்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. நான் வாழும் இந்த தேசத்தை என் உயிரினும் மேலாக மதிக்கிறேன். எனது கருத்தை வேண்டுமென்றே சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்", என்றார்.