என்னங்கடா இது.. இப்படி மாலை மாத்தறீங்க.. பயந்து வருதே!
பெரும்பாலான திருமணங்களில் மாலையை மாற்றி தம்பதி திருமணம் செய்துக் கொள்வர். ஆனால் இந்த வீடியோவில் மாலைக்கு பதிலாக மலைபாம்பை மாற்றி திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
டெல்லி: ஒரு திருமணத்தில் மாலையை மாற்றுவதற்கு பதிலாக மலை பாம்பை மணமக்கள் தங்கள் கழுத்துகளில் மாற்றிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்றாலே தாலியும், பூமாலையும்தான் நினைவுக்கு வரும் (பந்தி அப்புறம்தாங்க). எந்த மதத்தினரின் திருமணமாக இருந்தாலும் அதன் சடங்குகள் ஒன்றுக்கு ஒன்று மாறுப்பட்டு இருக்குமே தவிர அனைவரும் பூமாலையோ அல்லது மோதிரமோ மாற்றிக் கொண்டுதான் திருமணம் செய்வர்.
ஆனால் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவை பார்த்தால் பகீரென இருக்கிறது. ஒரு கிராமத்தில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஊர் மக்கள் திரண்டுள்ளனர். அங்கு மந்திரங்கள் ஓதப்படுகின்றன. அப்போது மணமகளின் கையில் சிறிய வகை பாம்பும் , மணமகன் கையில் மலைப்பாம்பு கொடுக்கப்படுகிறது.
கூட்டத்தை கண்டு பயப்படும் அந்த ஜீவன்களை அமைதியாக இரு என்று கூறும்வகையில் சாந்தி சாந்தி என்று கூறுகின்றனர். இதையடுத்து ஒருவர் கூறும் மந்திரத்தை மணமகள் கூறிவிட்டு தன் கையில் இருந்த சிறிய பாம்பை மணமகன் கழுத்தில் போடுகிறார்.
அதேபோல் மணமகனும் மந்திரங்களை கூறிவிட்டு தன் கையில் இருக்கும் மலைப்பாம்பை அந்த பெண்ணின் கழுத்தில் போடுகிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து மலைப்பாம்பை மாலையாக கருதி தங்கள் தலையை காட்டுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவ பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைஞ்சா அதற்கு கம்பெனி பொறுப்பல்ல. நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய!