3வது முறையாக இன்று ஏலத்துக்கு வருகிறது மல்லையாவின் சொகுசு விமானம்.. ஆரம்ப விலை ஜஸ்ட் ரூ.152 கோடி
மும்பை: ரூ.535 கோடி சேவை வரி பாக்கியை வசூலிக்க விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை 3வது தடவையாக ஏலம் விடும் முயற்சி இன்றும், நாளையும் நடக்கிறது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடனை பெற்றுக்கொண்டு, தொழில் நஷ்டமடைந்ததால், நடவடிக்கைக்கு பயந்து, லண்டனுக்கு தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். இதுதவிர, அவர் சேவை வரித்துறைக்கு ரூ.535 கோடி வரி பாக்கி வைத்துள்ளார்.

இந்த பாக்கியை மீட்கும் நடவடிக்கையாக, விஜய் மல்லையா பயன்படுத்தி வந்த சொகுசு விமானத்தை ஏலம் விடும் முயற்சியில் சேவை வரித்துறை ஈடுபட்டு வருகிறது.
சொகுசு விமானத்தின் ஏல ஆரம்ப தொகை ரூ.152 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. இந்த விமானம் கடந்த ஜூன் மாதம் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ.1 கோடியே 9 லட்சத்துக்கு மட்டுமே ஏலம் எடுக்க ஒருவர் மட்டுமே முன்வந்தார். எனவே 2வது தடவையாக கடந்த ஆகஸ்டு மாதம் ஏலம் விடும் முயற்சி நடந்தது. அப்போது ரூ.27 கோடிக்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டது.
2 தடவை ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, ஆரம்ப தொகையை மறுஆய்வு செய்யுமாறு மும்பை ஹைகோர்ட்டு சேவை வரித்துறையை அறிவுறுத்தியது. ஆனால் ஆரம்ப ஏல தொகையை குறைத்தால், அது ஏல நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று சேவை வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 3வது முயற்சியாக ஏலம் விடப்படுகிறது. உலகளாவிய அளவில் பலர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சேவை வரித்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.












Click it and Unblock the Notifications