குஜராத்தில் தமிழ் பள்ளிகளை மூடுவதா? தமிழ்நாட்டில் பிற மொழி பள்ளிகளை பூட்டுவோம்..வேல்முருகன் வார்னிங்
அகமதாபாத்: குஜராத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகள் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என்றும்.. அந்த பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள பிற மொழி பள்ளிகளை பூட்டுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள், கடந்த 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஜில்லுன்னு ஒரு குளியல்..மன்னார்குடி ராஜ கோபால சுவாமி கோவில் பாப் கட் செங்கமலத்திற்கு நீச்சல் குளம்
பேரதிர்ச்சி அளிக்கிறது
இவர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக, குஜராத்தில் உள்ள சில பகுதிகளில், 1910-ம் ஆண்டில் தமிழ் வழி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகமதாபாத்தில் 100 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழ் பள்ளிகள், கடந்த 2 ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வேதனை அளிக்கிறது
பள்ளி நடத்துவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வந்த போதும், குஜராத் அரசு அதனை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியாமல் தவித்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழ் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், தமிழ் மாணவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாகி இருக்கிறது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாத தமிழ் சமூகம், மோடி கும்பலின், நயவஞ்சகத்தையும், நளினப்பேச்சையும் கேட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடி
தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார். தமிழ் பேசுவதும், காசி தமிழ் சங்கமம் நடத்துவதும், எதிர் வரும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலையொட்டியே என்ற சூழ்ச்சியை கூட புரிந்து கொள்ள முடியாத ஏமாளி தமிழர்களாக உள்ளோம். தமிழ் மொழி என்றால், மோடி, அமித்ஷா கும்பலுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டை தவிர, இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே எரிச்சலையூட்டும். இதற்கு சான்றுகள் ஏராளம்.
இழுத்து பூட்டும் என எச்சரிக்கை
எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க, குஜராத் அரசை வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை, குஜராத் அரசு மறுக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் உள்ள பிற மொழி பள்ளிகளை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி இழுத்து பூட்டும் என எச்சரிக்கை விடுக்கிறது.