பால் தாக்கரேவுக்காக சிவசேனா குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறோம் - மோடி
புனே: மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். இதன் காரணமாகத்தான் சிவசேனா குறித்து எதுவும் பேசாமல் தவிர்க்கிறோம், அமைதி காக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை மோடி தொடங்கியுள்ளார். சாங்லி மாவட்டம் தஸ்கோவன் பகுதியில் இன்று அவர் நடந்த பிரசாரக் கூட்ட்தில் பேசினார்.
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலை சிவசேனாவும், பாஜகவும் தனித் தனியாக பிரிந்து முதல் முறையாக சந்திக்கவுள்ளன. இந்த நிலையில் கூட்டணி பிரிவு குறித்து மோடி தனது பிரசாரக் கூட்டங்களில் பேசியுள்ளார். இன்று நடந்த கூட்டத்தின்போது மோடி பேசுகையில்,
தாக்கரே இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இதுதான். சிவசேனாவுக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். அதுதான் தாக்கரேவுக்கு நான் கொடுக்கும் மரியாதை, செய்யும் அஞ்சலி.
ஆனால் புதிய தலைமுறை தலைவர்கள் பாஜக - சிவசேனா கூட்டணியைப் பிரித்து விட்டனர். முன்பு பிரமோத் மகாஜன், கோபிநாத் முண்டே போன்றோர் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் நல்ல தலைவராக பாலாசாஹேப் தாக்கரே இருந்தார். 25 வருடமாக கூட்டணியில் சிறிய சலசலப்பு கூட இல்லை. ஆனால் இப்போது புதிய தலைமுறை தலைவர்கள் வந்து விட்டனர்.
கூட்டணி அரசியல் மகாராஷ்டிராவை முன்னேற்றத் தவறி விட்டது. மக்கள் இந்த முறை பாஜகவுக்கு தெளிவான தீர்ப்பைத் தர வேண்டும். லோக்சபா தேர்தலைப் போல தெளிவான ஆதரவைத் தர வேண்டும்.
நாங்கள் மகாராஷ்டிராவை கைவிட மாட்டோம். இங்கு நல்ல பெரும்பான்மையுடன் பாஜகவை வெல்ல வையுங்கள்.
இங்கு சரத்பவார் முதல்வராக இருந்துள்ளார். மத்தியில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்துள்ளார். ஆனால் அவர் சாதித்தது என்ன.. குடிக்க தண்ணீர் கொடுத்தாரா அவர்.
இன்று இந்தியாவின் குரல் அமெரிக்காவில் கூட எதிரொலிக்கிறது. இது மோடியால் வந்ததுல்ல. கோடானு கோடி மக்கள் அளித்த தீர்ப்பால் வந்தது என்றார் மோடி.