லஞ்சம் வாங்கிக்கொண்டு ஊழல்வாதிகளை தப்பவிட்ட கர்நாடக லோக்-ஆயுக்தா நீதிபதி மகன் கைது!
பெங்களூர்: பணம் பெற்றுக்கொண்டு, ஊழல் அதிகாரிகளை லோக்-ஆயுக்தா ரெய்டில் இருந்து தப்பிக்க விட்ட குற்றச்சாட்டின்பேரில், கர்நாடக லோக்-ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவ் மகன், அஸ்வின் ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்பு அமைப்பாக தன்னாட்சியுடன் செயல்படுகிறது லோக்-ஆயுக்தா அமைப்பு. அவ்வப்போது அரசு அதிகாரிகள் வீடுகளில் திடீர் ரெய்டுகளை நடத்தி, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து வருகிறது.
இந்த அமைப்பின் நீதிபதியாக பாஸ்கர் ராவ் பதவி வகித்துவருகிறார். இந்த அலுவலகத்திலிருந்து போலீசார் ரெய்டுக்கு எங்கு செல்வது என்பதை பாஸ்கர் ராவ் மகன் அஸ்வின் ராவ், தீர்மானித்து வந்துள்ளார். எங்கெல்லாம் ரெய்டு செல்ல போலீசார் ஆயத்தமாகிறார்களோ, அவர்களை தொடர்புகொண்டு லஞ்சம் வாங்கிவிட்டு, ரெய்டை நிறுத்திவந்துள்ளார்.
சமீபத்தில் லோக்ஆயுக்தா போலீஸ் எஸ்.பி சோனியா நாரங் இதை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, சிறப்பு விசாரணை குழுவை அரசு அமைத்தது. அந்த விசாரணை குழு அஸ்வின் ராவை தெலுங்கானாவில் கைது செய்துள்ளது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் பாஸ்கர் ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார்.