பருவநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை: வளரும் நாடுகளின் தேவை பூர்த்தியாகும் - பிரகாஷ் ஜவடேகர்
லிமா: உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் பற்றிய பேச்சுவார்த்தையில் வளரும் நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஐ.நா பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 14 நாட்களாக நடந்தது. இதில் 194 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது கரி மற்றும் கரியமில வாயுவை வெளியிடும் அளவை ஒவ்வொரு நாடுகளும் குறைப்பது பற்றிய விவாதம் நடந்தது.

ஐ.நா பருவநிலை பிரிவு தலைவரும், பெரு நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரியுமான புல்கர் விடல் தலைமையில் நீண்ட நாட்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நேற்று ஒரு சமரச வரைவு உடன்படிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்திய பிரச்சினைகள் குறித்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் இரவுபகலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏற்பட்டுள்ள முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
இது வளரும் நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும். பருவநிலை மாற்றம் மற்றும் கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பாரீசில் அடுத்த ஆண்டு கையெழுத்தாகும். 2020 ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.
இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளை மேலும் வளப்படுத்தவும், தேசிய அளவில் உரிய, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் போதிய வாய்ப்புகளை வழங்கும். இறுதி வரைவு அறிக்கைபடி வளர்ந்த நாடுகளின் நிதி பங்களிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாக இருக்கும். அதோடு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஆதாரங்களை வழங்குதல், மாற்றம் செய்தல், கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றையும் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications