ஹேர்ஸ்டைல் சண்டை: காங்கிரஸ் எம்.எல்.ஏ மகன் மர்ம மரணம் - 3 பேரிடம் விசாரணை
டெல்லி: டெல்லியில், ஹேர்ஸ்டைலை கிண்டல் செய்ததால் உண்டான தகராறில் அருணாச்சல் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏவின் மகன் கடுமையாகத் தாக்கப் பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். ஆனபோதும், நிடோவைத் தாக்கிய கடைக்காரர் உள்பட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் முகவரி விசாரிப்பதற்காக டெல்லியின் கடை ஒன்றிற்கு விலாசம் விசாரிப்பதற்காகச் சென்ற அருணாச்சல் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏவின் மகன் நிடோ டேனியம் கடைக்காரர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நிடோ பலத்த காயமடைந்து பரிதாபமாகப் பலியானார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சி டெல்லி காவல்துறையைக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு டெல்லி போலீஸாரே பொறுப்பேற்க வேண்டும். இது துவேஷத் தாக்குதலாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீஸார் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாணவனது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நாளை நிடோமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனையில் தாக்கப் பட்டதால் தான் நிடோமின் மரணம் நிகழ்ந்ததா என்பதை உறுதி செய்வதற்காக போலீசார் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், நிடோ மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது விசாரணை நடத்தி வருவதாகவும் ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதற்கிடையே, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் நேற்று டெல்லியில் பேரணி நடத்தினர். வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது குறித்து முறையிட உள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வட கிழக்கு மாநிலங்களில் வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக கருதப்படுவதால் அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.