சு.சாமி, மேரி கோம், சித்து உள்பட 6 பேர் ராஜ்யசபாவுக்கு தேர்வு
டெல்லி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்பட 6 பேர் ராஜ்யசபா நியமன எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலங்களவையில் 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்க குடியரசுத் தலைவருக்குஅதிகாரம் உள்ளது. இதற்காக, சமூக சேவை, கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களின் பெயர்கள் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள நியமன எம்.பி.க்களின் எண்ணிக்கையில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளது. இதையடுத்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, மலையாள நடிகரும், பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு அனுப்பிய இந்த பரிந்துரை கோப்பில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். இதையடுத்து, நியமன உறுப்பினர்களாக 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியிடும் என உள்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
7வது காலி இடத்தை நிறப்ப பாலிவுட் நடிகர் அனுபம் கேரை பரிந்துரைப்பதா அல்லது பத்திரிக்கையாளர் ரஜத் சர்மாவை பரிந்துரைப்பதா என்று ஆலோசனை நடந்து வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபா உறுப்பினர்களான காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர், நாடகத் துறை பிரபலம் பி. ஜெயஸ்ரீ, கல்வியாளர் ம்ரினால் மிரி, பொருளாதார நிபுணர் பால்சந்திர முங்கேகர் ஆகியோர் மார்ச் மாதம் 21ம் தேதி ஓய்வு பெற்றனர். முன்னதாக தொழில்துறை நிபுணர் அசோக் கங்குலி மற்றும் பத்திரிக்கையாளர் ஹெச்.கே. துவா கடந்த ஆண்டு ராஜ்சபா உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்.