டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாமா? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: டெல்லி சட்டசபையை கலைக்க கோரிய ஆம் ஆத்மி கட்சியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் விசாரிக்க என உத்தரவிட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், லோக்பால் மசோதா நிறைவேற்றம் தொடர்பான விவகாரங்களில், காங்கிரஸ், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சரியான ஒத்துழைப்பு தராததாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், 49 நாட்களில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டெல்லியில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார். எனினும் சட்டசபை கலைக்கப்படவில்லை.
இதனிடையே, டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று, ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், கவர்னர் இது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் ஆம் ஆத்மி தலைவர்கள், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், பா.ஜ.,வினர், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடத்தி வருகின்றனர். எனவே மாநில சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச், இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கஉத்தரவிட்டார். அரசியல் சாசன சிக்கல் உள்ள வழக்கு என்பதால் இதை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது.












Click it and Unblock the Notifications