ஜெ. அரசு தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளையும் டிஸ்மிஸ் செய்யுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் சாமி வழக்கு
டெல்லி: ஜெயலலிதா தலைமையிலான அரசு தன் மீது தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளையும் டிஸ்மிஸ் செய்யுாறு கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சாமி இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா கைதாகி சிறைக்குச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சாமி மீது அவதூறு வழக்குகள் பாய்ந்தன. மொத்தம் 5 வழக்குகள் பதியப்பட்டன.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு இரங்கல் கூட்டம் நடத்த ஜெயலலிதா அனுமதி அளிப்பதாக கூறி டிவிட்டரில் செய்தி போட்டிருந்தார் சாமி. அதேபோல ஜெயலலிதாவை மீண்டும் சிறையில் களி திண்ண வைப்பேன் என்றும், புதிதாக சொத்துக் குவிப்பு வழக்குகள் அவர் மீது பாயும் என்றும் சாமி டிவிட் செய்திருந்தார்.
இதையடுத்து அவர் மீது செப்டம்பர் 16, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார். இதில் அவர் அக்டோபர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று செஷன்ஸ் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டார். இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் சாமி. இதையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சாமி தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குகளை அதிமுக அரசு தாக்கல் செய்துள்ளது. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. என்னை கோர்ட்டில் நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இதைப் போட்டுள்ளனர். எனவே ஐந்து வழக்குகளையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் என் மீதான வழக்குகளில் நான் கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் சாமி.