ஆருஷி கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து தல்வார் தம்பதி மேல்முறையீடு
அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ள தல்வார் தம்பதியினர் அதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு நொய்டாவை சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரின் 14 வயது மகள் ஆருஷி தனது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு மறுநாள் வீட்டு வேலைக்காரர் ஹேவ்ராஜ் என்பவரின் உடல் மாடியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் சிபிஐ முதலில் திணறியது. இருப்பினும் சிபிஐயின் நுனுக்கமான விசாரணையில், ஆருஷியின் பெற்றோர்தான் குற்றவாளி என்று கண்டறிந்தது. இதையடுத்து தந்தை, தாய் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் சிறுமி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோரை தல்வார் தம்பதியரே கொலை செய்தனர் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், கடந்த நவம்பர் 26ம் தேதி தல்வார் தம்பதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிபிஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தல்வார் தம்பதியினரின் வழக்கறிஞர் அறிவித்திருந்தார். மேலும், தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தல்வார் தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.
இந்தப் பின்னணியில், தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார். இந்த மேல் முறையீடு மனு குறித்தான விசாரணை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.