இன்சூரன்ஸ், பிஎப், குழந்தைகள் கல்விக் கட்டணம் செலுத்துவோருக்கு லாபம் தரும் பட்ஜெட்
மாத ஊதியம் வாங்குவோருக்கு வருமான வரியில் இருந்து கொஞ்சம் சலுகை தரப்பட்டுள்ள நிலையில், 80 C எனப்படும் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கும் வரிச் சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சமாக உயர்த்தியது மாத ஊதியக்காரர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இதேபோல் 80 சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகையும் அதிகரித்துள்ளது மாத ஊதியதாரர்களுக்கு கிடைத்த மற்றொரு பரிசு.
மாத ஊதியம் வாங்குவோரில் பெரும்பாலானோர் இந்த 80சி பிரிவின் கீழ் முதலீடுகள் செய்பவர்களே.
வருமான வரி சட்டத்தின்படி 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் காப்பீடு எனப்படும் இன்ஷூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப், குழந்தைகளுக்கான கல்விக்கு செலுத்தப்படும் கட்டணம், வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் அசல் (80-சியில் வீட்டுக் கடனுக்கான வட்டி வராது), தேசிய சேமிப்பு பத்திரம், இ.எல்.எஸ்.எஸ். (மியூச்சுவல் ஃபண்ட்), ஐந்து வருட வங்கி டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய் வரை வருமான வரிச்சலுகை கிடைத்து வருகிறது.
இதுவரை மேலே சொன்ன விஷயங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு வந்தது. இந் நிலையில் இது ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு பி.எப், இன்சூரன்ஸ் பாலிஸி, வீட்டுக் கடனுக்கான அசலை திருப்பிச் செலுத்துதல், பங்கு முதலீடு என ஆண்டுக்கு நீங்கள் ரூ. 1.8 லட்சம் கட்டி வந்திருந்தால் இதுவரை ரூ. 1 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு வந்தது. மிச்சமுள்ள ரூ. 60,000க்கு வருமான வரி செலுத்தி வந்திருப்பீர்கள்.
இப்போது இந்த வரம்பு ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் வருடத்துக்கு ரூ. 1.8 லட்சம் செலுத்தி வந்திருந்தால் இனி ரூ. 30,000க்கு மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டி வரும்.