நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. போராட்டத்தை கைவிடுங்கள்... விவசாயிகளிடம் தம்பிதுரை வேண்டுகோள்
30வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டக்களத்திற்கு 4வது முறையாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லி: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை 4வது முறையாக அதிமுக எம்பி தம்பிதுரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 30வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எலி கறி
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பாம்பு கறி, எலி கறி தின்று தங்களது கொடுமையான சூழலை அரசிற்கு எடுத்துரைக்க முயன்றனர்.
உடலில் எழுதி..
அந்த வகையில் நேற்று விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டு தங்களது போராட்டம் நடத்தினர். இன்று கோரிக்கைகளை மையினால் உடலில் எழுதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தம்பிதுரை சந்திப்பு
இந்நிலையில், இன்று அதிமுக எம்பியும் லோக் சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை விவசாயிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒத்தி வைப்பு தீர்மானம்
பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை, "விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக எம்பிக்கள் பேசினார்கள். இதுகுறித்து பேசுவதற்கு எம்பிக்கள் இருக்கிறோம். எனவே போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்" என்று விவசாயிகளிடம் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.