ஏர் இந்தியாவின் அலட்சியத்தால் பாரீஸ் ஏர்போர்ட்டில் தவிக்கும் 40 இந்திய பள்ளி மாணவர்கள்
டெல்லி: டெல்லியில் உள்ள கே.ஆர். மங்களம் வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் 40 பேர் பாரீஸில் உள்ள விமான நிலையத்தில் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள கே.ஆர். மங்களம் வேர்ல்ட் ஸ்கூலைச் சேர்ந்த 40 மாணவர்கள் ஐரோப்பாவுக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். மாணவர்கள் 3 ஆசிரியர்களுடன் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, வாடிகன், ஜெனிவா, ப்ருஸல்ஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளனர்.
பாரீஸ் வந்த மாணவர்கள் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று இரவு 10 மணிக்கு அங்கிருந்து கிளம்ப வேண்டியது. மாணவர்கள் விமான நிலையத்திற்கு வந்த பிறகு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரமணாக கிளம்பவில்லை. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் மாணவர்கள் தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுக்கவும் இல்லை, அவர்களை வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் இல்லை.
இதனால் மாணவர்கள் பாரீஸ் விமான நிலையத்திலேயே கடந்த 12 மணிநேரத்திற்கும் மேலாக தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கூட வழங்காமல் தவிக்க விட்டுள்ளது ஏர் இந்தியா என அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் மாணவர்கள் குளிரில் தரையில் படுத்து தூங்கியுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் அலட்சியத்தால் பெற்றோர் கோபம் அடைந்துள்ளனர்.