குண்டூர்- விஜயவாடா இடையே ஆந்திராவின் புதிய தலைநகர்! பொதுமக்களிடம் நிதி வசூல்!!
விஜயவாடா: புதிய ஆந்திராவின் தலைநகர் குண்டூர்- விஜயவாடா இடையே அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிய தலைநகரில் அனைத்து துறை அலுவலகமும் செயல்படும். ஹைதராபாத்தை விட அழகுற அமையும். புதிய தலைநகர் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தரும்படி மத்திய அரசை கேட்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் புதிய தலைநகர் உருவாக்க பொது மக்களிடமும் ஆந்திரா அரசு நிதி திரட்டுகிறது. இதற்காக முதல்வர் நிவாரண நிதி கணக்கில் ‘‘புதிய தலைநகர் வளர்ச்சி நிதி'' என்ற பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
புதிய தலைநகருக்காக பொது மக்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் தாராளமாக நிதி வழங்கும்படியும், அதற்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது.
பொது மக்கள் பணத்துக்குரிய காசோலை மற்றும் வரைவோலையை எப்படி அனுப்ப வேண்டும் வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.