பிரச்சினை பிரியங்கா தொடையும், அவர் பெண் என்பதும்தான்..இல்லையா??
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை பிரியங்கா காந்தி பெர்லினில் வைத்து சந்தித்தபோது அவர் கால்களை பளிச்சென காட்டியபடி அமர்ந்திருந்ததை வைத்து இன்னும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னகத்துக்காரர்களுக்கு பிரியங்கா கால் மேல் கால் போட்டு மரியாதைக் குறைவாக உட்கார்ந்திருந்தார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வடக்கிலோ, வழவழவென்ற தனது காலை கவர்ச்சிகரமாக பிரியங்கா காட்டியது தப்பு என்று சொல்கிறார்கள். அதேசமயம், ஒரு ஆண் முன்பு அதுவும் பிரதமர் முன்பு எப்படிக் கால் மேல் கால் போடலாம் என்பதும் அவர்களின் கோபம்.
வடக்கில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தெனாவெட்டாக உட்காரும் பழக்கம் அதிகம் உண்டு. தெற்கில் அப்படிப் பார்க்க முடியாது. கால் மேல் கால் போட்டால் மரியாதைக் குறைவு என்பது நம்மவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் வடக்கில் அப்படி கிடையாது. அதேசமயம், அதிலும் ஆணாதிக்கம் உண்டு.
கவர்ச்சி + கால் மேல் கால் தப்பு.. !
வடக்கில் ஆண்கள் கால் மேல் கால் போட்டால் தப்பாகப் பார்க்க மாட்டார்கள். அங்கு கால் மேல் கால் போட்டு எகத்தாளமாக, ஒய்யாராமாக ஆண்கள் அமருவது ரொம்ப சகஜம். அப்படித்தான் உட்காரவும் செயவார்கள்.
ஆணாதிக்கம்
ஆனால் ஆண்கள்தான் கால் மேல் கால் போட்டு உட்காரலாம். பெண்கள் உட்கார முடியாது, கூடாது, மீறி உட்கார்ந்து விட்டால், அதிலும் பிரியங்கா மாதிரி காலை காட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டால்.. அவ்வளவுதான். பாய்ந்து விடுவார்கள். காரணம் கால் போடுவதிலும் ஆணாதிக்க மனப்பான்மை பெரும்பான்மையாக இருப்பதால்.
ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா.. மனுஷன், காலைத் தூக்கி தலையைத் தொடுவது போலத்தான் எப்போதும் உட்கார்ந்திருப்பார். அவர் நல்ல உயரம் வேறு. எனவே கால் மேல் கால் போட்டு செருப்பு மூஞ்சியில் அடிப்பது போல உட்கார்ந்திருக்கும் அவரைப் பார்த்தாலே, என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறார் என்றுதான் நமக்குத் தோன்றும்.
விஜயகாந்த்தைப் பார்க்க வந்தபோது
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பாஜக, தேமுதிக, பாமக இணைந்து கூட்டணி வைத்த காமெடி அரங்கேறியது. அப்போது விஜயகாந்த், வைகோவுக்கு நடுவே ராஜ்நாத் சிங் உட்கார்ந்திருந்தார். மேடையில் இருந்த எல்லோரும் மரியாதையாக அமர்ந்திருக்க, செருப்பு எதிரில் இருப்பவர் முகத்தில் தெரியும் வகையில் ராஜ்நாத் அமர்ந்திருந்ததை அனைவரும் வித்தியாசமாகவே பார்த்தனர்.
அகிலேஷும் அப்படியே
முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும் கூட அப்படித்தான். கால் மேல் கால் போட்டபடிதான் பெரும்பாலும் காணப்படுவார். கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருப்பதை ஒரு ஸ்டைல் ஐகான் மாதிரியே மாற்றியிருப்பார்கள் வட இந்திய அரசியல்வாதிகள்.
அத்வானி - மோடி
பிரதமர் மோடி, அத்வானி ஆகியோரும் கூட கால் மேல் கால் போட்டு அமரக் கூடியவர்கள்தான். ஆனால் அதில் மரியாதைக் குறைவு பெரிதாக தெரியாது. எல்லோர் முன்பும் அவர்கள் அப்படி அமருவதில்லை.
ஸ்டாலின் முன்பு கால் போட்ட ராகுல்
முன்பு டெல்லியில் ராகுல் காந்தியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது ராகுல் காந்தி கால் மேல் கால் போட்டு அமந்ந்தபடி பேசினார். மறுபக்கம் ஸ்டாலின் இயல்பாக அமர்ந்திருந்தார். இத்தனைக்கும் ராகுலை விட வயது முதிர்ந்தவர் ஸ்டாலின். இதுவும் கூட சர்ச்சையைக் கிளப்பியது.
காலும், தொடையும்தான் பிரச்சினை
இது பெரிய லிஸ்ட்.. இப்போது பிரியங்கா காலைக் காட்டி விட்டார், தொடையைக் காட்டி விட்டார் என்பதால்தான் டிரோல் ஓவராக இருக்கிறது. அதை விட முக்கியமாக பிரதமர் முன்பு ஒரு பெண் எப்படி காலைத் தூக்கி போட்டு உட்காரலாம் என்பதும் வட இந்தியர்களின் விசனமாக உள்ளது.