சட்டசபை, நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.. தலைமை தேர்தல் ஆணையர் தடாலடி
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக மாநில அரசுகளிடமும் அவர் கருத்துக்களை கேட்டு வருகிறார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு மிச்சமாகும் என்றும் மோடி கூறியிருந்தார். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு பாஜக அல்லாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும்
சட்ட திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்தார்.