தபோல்கர், கோவிந்த் பன்சாரேவைத் தொடர்ந்து கல்பர்கியை படுகொலை செய்த வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதம்!
பெங்களூர்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் தபோல்கர், கோவிந்த் பன்சாரேவை சுட்டுப் படுகொலை செய்ததைப் போல கர்நாடகாவைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் சிறந்த எழுத்தாளருமான கல்பர்கி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பகுத்தறிவாளர்களை படுகொலை செய்யும் வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத கும்பலின் வெறிச்செயல் விஸ்வரூபமெடுத்திருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் (வயது 77) கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
தபோல்கர் வழக்கு..
கடந்த மே மாதம் தபோல்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது மகாராஷ்டிரா அரசு. சி.பி.ஐ.யும் கூட தபோல்கர் படுகொலை சந்தேக நபர்கள் எனக் கூறி 2 பேரின் புகைப்படங்களை வெளியிட்டதுடன் சரி.. இன்னமும் கிணற்றில் போட்ட கல்லாகவே இந்த வழக்கு இருக்கிறது.
கோவிந்த் பன்சாரே
இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரேவை இந்துத்துவா தீவிரவாத கும்பல் மகாராஷ்டிராவில் சுட்டுப் படுகொலை செய்தது.
கல்பர்கி
இதேபோல் தற்போது கர்நாடகாவின் பகுத்தறிவாளரும் புரட்சிகர எழுத்தாளரும் கல்பர்கியும் (வயது 77) வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தபோல்கரை சுட்டுக் கொன்ற பாணியிலேயே கல்பர்கியையும் படுகொலை செய்துள்ளனர்.
இந்துத்துவா கும்பல்
ஆகையால் இந்த 3 சம்பவங்களிலும் இந்துத்துவா தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பது உறுதியாக தெரிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 9-ந் தேதியன்று இந்து உருவ வழிபாட்டை எதிர்த்து அறிக்கை வெளியிட்டதற்காக இந்துத்துவா தீவிரவாதிகள் கல்பர்கி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தனர். அப்போது பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா ஆகியவை கல்பர்கிக்கு எதிராக போராட்டம் நடத்தின. அத்துடன் கல்பர்கி வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடத்தி கற்கள், சோடா பாட்டில்களை வீசியிருந்தனர்.
தொடரும் மிரட்டல்
மேலும் மங்களூரைச் சேர்ந்த பஜ்ரங்தள் தலைவர் புவித் ஷெட்டி என்பவர் தமது ட்விட்டர் பக்கத்தில் யூ.ஆர். அனந்தமூர்த்தியைப் போல கல்பர்கியும் பேசுகிறார்... இந்துயிசத்தை விமர்சித்தால் நாய்போல மரணிப்பர்... அடுத்து கே.எஸ். பகவான் நீங்கள்தான்.. என எழுதியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் தமது ட்விட்டர் பக்கங்களை மாற்றிவிட்டார்.
யார் இந்த பகவான்?
இந்துத்துவா தீவிரவாத கும்பல் குறி வைத்திருக்கும் பகவான், மைசூர் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவருக்கு ஏற்கனவே இந்துத்துவா தீவிரவாத கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது. இப்படி விஸ்வரூபமெடுக்கும் இந்துத்துவா தீவிரவாத கும்பலின் வெறிச்செயல் நாட்டில் கல்வியாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் அதிர வைத்துள்ளது.