பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி கூறிய சு.சாமியின் வாயில் சக்கரை தான் போடணும்!
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து வந்த கிரிக்கெட் ரசிகர் இந்தியாவில் உளவு பார்த்து தாக்குதல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்தால் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளும் வருவார்கள் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்தது ஒரு வகையில் உண்மை தான்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்தால் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளும் வருவார்கள் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியது உண்மை என்பது போன்று உள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்தால் அந்த அணியை ஊக்குவிக்க பல பாகிஸ்தான் ரசிகர்கள் இங்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது.
மும்பை தாக்குதல்
2005ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் என்ற பெயரில் ஐஎஸ்ஐ உளவாளி சஜித் மிர் இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் வேவு பார்த்து 26/11 தாக்குதலுக்கு வழிவகுத்தார். மும்பை தாக்குதல் வழக்கில் அவரும் ஒரு குற்றவாளி. மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியை ஆட்டி வைத்தவர் மிர். மிர் கிரிக்கெட் ரசிகர்களோடு ரசிகர்களாக இந்தியாவுக்குள் நுழைந்தது விசாரணையில் தெரிய வந்தது.
மிர்
ஐஸ்ஐ/லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மிகவும் அறிவான மற்றும் ஆபத்தான நபர்களில் ஒருவர் மிர். சஜித் மிர் எவ்வளவு அபாயகரமான தீவிரவாதி என்று உலகிற்கே தெரியும். ஆனால் பாகிஸ்தானோ அப்படி ஒருவர் இருப்பதே தெரியாது என்று இந்நாள் வரை கூறி வருகிறது.
லஷ்கர் இ தொய்பா
லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சஜித் மிருக்கு ஐஎஸ்ஐ கடந்த 2005ம் ஆண்டு உத்தரவிட்டது. 26/11 மும்பை தாக்குதலில் லக்ஷ்கர் இ தொய்பாவுக்கு உதவுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
கிரிக்கெட்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டி நடக்கும்போது இந்தியாவுக்கு செல்வது தான் சரி என்று நினைத்தார் மிர். கிரிக்கெட் போட்டியை காண பாகிஸ்தானில் இருந்து வந்த மிர் மற்றும் 12 ரசிகர்கள் மாயமாகினர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் யாரும் சிக்கவில்லை.
15 நாட்கள்
கிரிக்கெட் போட்டியை காண வரும் சாக்கில் இந்தியா வந்த மிர் இங்கு 15 நாட்கள் தங்கி உளவு பார்த்துள்ளார். மிர் இந்தியாவில் எங்கு எல்லாம் சென்றார் என்று விசாரணை அதிகாரிகளுக்கு இதுவரை தெரியவில்லை.