வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைப்போம்... அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தியாகம் என மக்கள் பாராட்டுவார்கள் என எதிர்பார்த்ததாகவும், மீண்டும் வாய்ப்பு அமைந்தால் டெல்லியில் போட்டியிட்டு ஆட்சி அமைப்போம் எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், ஒன்றரை மாதங்களிலேயே தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால். இந்நிலையில் தற்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரம் காரணமாக வாரணாசி சென்றுள்ள கெஜ்ரிவாலை எதிர்க்கும் விதமாக நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், முதல்வர் பதவியை விட்டு பயந்து ஓடியவர் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால், இது தொடர்பாக கூறியதாவது:-
தவறான முடிவு...
டெல்லியில் பதவி விலக எடுத்த திடீர் முடிவு தவறானது. ராஜினாமா குறித்த முடிவு நான் செய்த தவறுகளில் ஒன்று என நான் நினைக்கிறேன்.
மக்கள் கருத்து...
டெல்லியில் அரசு அமைக்கும் முன் பொதுமக்களின் கருத்தை நாங்கள் கேட்டு ஆட்சியில் ஏறியது போன்று விலகும் போதும் அதே வழியை பின்பற்றி இருக்க வேண்டும்.
தொடர்பு சிக்கல் இருந்தது...
விலகும் முன்னும் பொதுமக்களின் கருத்தை நாங்கள் கேட்டு இருக்க வேண்டும். தொடர்பு சிக்கல் இருந்ததை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.பாரதீய ஜனதாவும் காங்கிரசும் இணைந்து எங்கள் அரசை செயல்படவிடாமல் தடுத்தது.
ஆன்மா உடன்படவில்லை...
மற்றவர்களை போல் நானும் முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் எனது ஆன்மா அதற்கு உடன்படவில்லை. எனவே நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்.
மிகப்பெரிய தியாகம்....
நாங்கள் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளோம். மக்கள் பாரட்டுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் மக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. நிறையை இடங்களில் மக்கள் எங்களை பார்த்து ஏன் பதவி விலகினீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.
மீண்டும் டெல்லியில் ஆட்சி...
எனினும் ராஜினாமா செய்தது பொறுப்பற்ற செயல் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் எங்கேயும் ஓடிவிடவில்லை.வாய்ப்பு வழங்கப்பட்டால் மீண்டும் டெல்லியில் போட்டியிட்டு அரசு அமைப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.