ஜெயிலர் சார், நான் வேலைக்குப் போய்ட்டு வர்றேன்... விரைவிலேயே கைதிகள் இப்படிச் சொல்லலாம்!
இந்த புதிய திட்டம் குறித்து திகார் சிறை இயக்குநர் விம்லா மெஹ்ரா கூறியதாவது:
" திகார் திறந்த வெளிச் சிறைச்சாலையில், தோ்வு செய்யப்பட்ட கைதிகள் சிறை வளாகங்களுக்கு வெளியே சென்று வேலை செய்வதற்கு அனுமதிக்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், டெல்லியின் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த புதிய திட்டம், கைதிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் அர்ப்பணிப்பு உணர்வோடு அவர்கள் செய்யும் வேலையின் மூலம் கைதிகள் தங்கள் ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு தேர்வு செய்யப்படும் கைதிகள் பொதுத்துறை பணிகள், தோட்டக்கலைப் பணிகள், மற்றும் தனியார் பணிகளில் திகார் சிறைக்கு அருகில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக கைதிகள் தாங்கள் நன்னடத்தையுடன் நடந்து கொள்வோம் என உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும். அவர்களுக்கு அனுமதி தருவது குறித்து சிறை இயக்குநரே முடிவு செய்வார்.
இவ்வாறு வெளியே சென்று வேலை செய்ய அனுமதிக்கப்படும் கைதிகள் தங்கள் நன்னடத்தையை மீறி தவறாக நடந்தால் மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவதோடு சட்ட விதிகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் ", இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.