திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 9வது நாளான இன்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஸ்ரீதேவி, பூதேவிதாயாருடன் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான கருடசேவை கடந்த 20ம் தேதி நடைபெற்றது.
தேரோட்டம்
21ம் தேதி மாலை தங்கத்தேரோட்டமும், புதன்கிழமை காலை மகாதேரோட்டமும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து தரிசித்தனர். சுவாமி ஊர்வலத்தின்போது பக்தர்கள், கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து நடனமாடி மகிழ்ந்தனர்.
கல்கி அவதாரம்
8ம் நாளான புதன்கிழமையன்று இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். உற்சவர் ஏழுமலையானின் அருள்பெற மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி
பிரம்மோற்சவத்தின் 9ம் நாளான இன்று காலை வராக புஷ்கரணியில் சக்கரஸ்நானம் நடந்தது. வராக சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
புனித நீராடல்
இதைத்தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அப்போது கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இரவு 7 மணியளவில் திருச்சி விகை எனும் பல்லக்கில் ஏழுமலையான், உபநாச்சியாருடன் திருமாட வீதியில் உலா வருகிறார்.
பிரம்மோற்சவம் நிறைவு
இதனைத் தொடர்ந்து துவஜரோகனம் நடைபெற்றது. பிரம்மோற்சவம் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக வேத மந்திரங்கள் முழங்க கருடன் கொடி கீழிறக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டின் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
நவராத்திரி பிரம்மோற்சவம்
இந்த ஆண்டின் 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.