திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன வரிசையில் மாற்றம்... நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் ஏற்பாடு
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருமலை: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசன வரிசையில் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் இடத்தில் வெள்ளி கதவின் வலது திசையில் 15 முதல் 20 அடி உயரத்திற்கு உள்ள இடத்தில், இரும்புப் படி அமைத்து பிரசாதங்கள் வழங்கும் இடம் உள்ளது. அதன் அருகே பக்தர்கள் வெளியே வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்தப் படி வழியாகப் பக்தர்களை அனுமதிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது வெள்ளி கதவு அருகே தரிசனத்திற்கு உள்ளே செல்லும் பக்தர்களும் வெளியே வரும் பக்தர்களும் குறுகிய வழியில் வந்து செல்கிறார்கள்.
இதனால் பக்தர்கள் மத்தியில் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக இந்த புதிய வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.