Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புகின்றன தமிழக கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

parliament
டெல்லி: இலங்கை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சனையை எழுப்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கை, காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது ஆகியவற்றை தீவீரமாக எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

திமுக மும்முரம்

இது தொடர்பாக திமுகவின் டி.ஆர். பாலு கூறுகையில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோ அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என எங்கள் கட்சி சார்பில் ஏற்கெனவே கோரியுள்ளோம். அதேபோல, இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். டெசோ கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டு மனித உரிமைகளில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இரு அவைகளிலும் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்துவர். இது தொடர்பாக வரும் நாள்களில் திமுகவினர் தீவிரமாக அவையில் பிரச்னை எழுப்புவர் என்றார்.

சளைக்காத அதிமுக

அதிமுகவின் டாக்டர் வா. மைத்ரேயன் கூறுகையில், காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது, இலங்கைக்கு எவ்விதப் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளோம். வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுச் செயல்பட கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம். கச்சத்தீவை மீட்பது, இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைக் காக்க நிரந்தர நடவடிக்கை போன்றவை குறித்தும் இக் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்துவர். இந்த விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து, ராஜ்யசபாவில் எனது தலைமையிலும், லோக்சபாவில் அதிமுக குழுத் தலைவர் தம்பிதுரை தலைமையிலும் எங்கள் கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்புவர் என்றார்.

ஆதரிக்கும் இ. கம்யூ

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி. ராஜா, காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது குறித்து மத்திய அரசிடம் அவையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளேன். தமிழகத்தில் கெயில் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்கக் கோரி வலியுறுத்துவோம் என்றார்.

மதிமுக, வி.சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன், இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது; இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை அந் நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவும், தமிழக மீனவர்களைக் காக்கவும் வலியுறுத்தி, வரும் நாள்களில் தொடர்ந்து பிரச்னை எழுப்புவேன். இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

மதிமுகவின் கணேசமூர்த்தி கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது. ஆனால், அதன் பிறகும் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கவில்லை. அதை வலியுறுத்தி நான் பிரச்னை எழுப்புவேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+