நாளை 91வது பிறந்த நாள்... வாஜ்பாயிக்காக சிறப்பு ரயில் விடும் ரயில்வே!
ஆக்ரா: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை இன்று முதல் இயக்க உள்ளது.
வாஜ்பாயி 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாம்ல் வாழ்ந்து வருகிறார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், நாளை தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் வாஜ்பாயி.
அவரை கவுரவிக்கும் வகையில் இந்தியன் ரயில்வே புதிய ரயில் ஒன்றை இன்று முதல் இயக்குகிறது. இந்த ரயிலை ரயில்வே மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆக்ராவில் உள்ள படேஸ்வரில் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
படேஸ்வரானது யமுனை ஆற்றங்கரையில் 101 சிவ ஆலயங்களைக் கொண்ட நகர் ஆகும். இந்த நகரத்திலிருந்து புறப்படும் ரயிலானது வாஜ்பாயின் சொந்த ஊரான எடாவா வரை செல்லும்.
இந்த ரயிலுக்கான திட்டமானது கடந்த 1999ம் ஆண்டு வாஜ்பாயி பிரதமராக இருந்த போது துவக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களால் இந்தப் பணி தொய்வடைந்தது.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்தத் திட்டம் முழுமையடைந்து புதிய ரயில் ஓடப் போகிறது. இந்தத் திட்டத்திற்கு சுமார் ரூ. 250 கோடி வரை செலவானதாகக் கூறப்படுகிறது.