பெங்களூரில் இருந்து ஒரே நேரத்தில் இரு கேபினெட் அமைச்சர்கள் பதவியேற்பு
டெல்லி: ஒரே நகரில் இருந்துவந்த இரண்டு கேபினெட் அமைச்சர்கள் மோடி அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள் என்ற பெருமையை ஐடி தலைநகரான பெங்களூர் பெற்றுள்ளது.

நரேந்திரமோடியின் அமைச்சரவையில் இன்று, சதானந்தகவுடா மற்றும் அனந்தகுமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்தனர். இவர்கள் இருவருமே பெங்களூரின் இரு தொகுதிகளில் இருந்து தேர்வான எம்.பிக்கள் என்பது சிறப்பு.
பெங்களூரில், சென்னையை போன்றே மூன்று தொகுதிகள் உள்ளன. அதாவது, தெற்கு, மத்தி மற்றும் வடக்கு பெங்களூர் ஆகியவை அந்த தொகுதிகள். இதில் வடக்கு பெங்களூரில் இருந்து சதானந்தகவுடாவும், தெற்கு பெங்களூரில் இருந்து அனந்தகுமாரும் வெற்றி பெற்றிருந்தனர்.
கர்நாடக வரலாற்றில் பெங்களூர் நகரில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இரு எம்.பிக்கள் கேபினெட் அமைச்சர்களாக ஒரே நேரத்தில் பணியாற்றுவது இதுதான் முதல் முறையாகும். கடந்த மூன்று தேர்தல்களிலும் பெங்களூர் நகரின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது மட்டும் அமைச்சர் பதவியை இருவர் பெற காரணம் இல்லை. அமைச்சர் பதவி பெற்ற இருவருமே சீனியர்கள் என்பதும் இதில் முக்கியமானது.












Click it and Unblock the Notifications