பாஜகவுக்கு ரூ500 நோட்டு தனியாக அச்சடிக்கப்படுகிறதா? காங். 'திடுக்' புகாரால் ராஜ்யசபாவில் கடும் அமளி
பாரதிய ஜனதா கட்சிக்கு தனியாக ரூ500 நோட்டு அச்சடிக்கப்படுவதாக காங்கிரஸ் கூறிய புகாரால் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சிக்கும் மத்திய அரசுக்கும் தனித் தனியாக இரண்டுவிதமான ரூ500 நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது. இப்புகாரால் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் ஜீரோ அவரில் காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் எழுந்து ரூ500 நோட்டுகள் இரண்டு விதமாக அச்சடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி பேசினார். அப்போது, நாங்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறோம். ஆனால் ஒருபோதும் இரண்டு விதமான ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது இல்லை.
பாஜகவுக்கு தனியாக ரூ500 நோட்டு; மத்திய அரசுக்கு தனியாக ரூ500 நோட்டு. இரண்டு நோட்டுகளின் அளவும் வடிவமைப்பும் வெவ்வேறாக இருக்கிறது என அதிரடியாக குற்றம்சாட்டினார்.
கபில் சிபலுடன் இணைந்து கொண்டு குலாம்நபி ஆசாத்தும், ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
Watch LIVE: AICC Press Briefing by @KapilSibal https://t.co/p7vCbOSoVa
— INC Live (@INCIndiaLive) August 8, 2017
ஆனால் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி இதை முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்தார். மேலும் ஜீரோ அவரை காங்கிரசார் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது.