துபாய் சாதனையை முறியடித்த உதய்பூர்.. 3 லட்சம் துணிகளை தானமாகப் பெற்ற லக்ஷ்யராஜ்!
உலகம் முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான துணிகளை தானமாகப் பெற்று புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: உலக முழுவதிலும் இருந்து சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான உபயோகித்த துணிமணிகளைத் தானமாகப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் உதய்பூரைச் சேர்ந்த ஸ்ரீ லக்ஷ்யராஜ் சிங் மேவார்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு, இருப்பிடத்தைப் போன்றே உடையும் ஒன்று. ஆனால், அனைவருக்கும் தன் மானத்தை மறைக்க தேவையான உடை கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான். எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் லக்ஷ்யராஜ்.

இந்தாண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி இந்த உபயோகித்த துணிகளை தானமாகப் பெறும், 'வஸ்திர தானம்’ பிரச்சாரத்தை லக்ஷ்யராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவருக்கு உதவியாக களமிறங்கிய 1700 தன்னார்வலத் தொண்டர்கள், இந்த மூன்று மாத காலத்தில் சுமார் 76 ஆயிரம் பேரிடம் இருந்து, அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய துணிகளை தானமாகப் பெற்றனர். இந்த பிரச்சாரத்தின் மூலம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான துணிகள் கிடைத்துள்ளன.
இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு துபாயில் நடந்த உபயோகித்த துணிகள் சேகரிப்பில் 2,95,122 துணிமணிகள் கிடைத்தது தான் உலக சாதனையாக இருந்தது. இந்த துணிகள் அனைத்தும் நன்றாக துவைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் துணிகளை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தர வேண்டும் என சாதாரண முறையில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, உலக சாதனையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த துபாய் சாதனையை லக்ஷ்யராஜ் தனது குழுவினருடன் சேர்ந்து முறியடித்துள்ளார். இவரது துணிகள் தானமாக வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலியா, ஓமன், இலங்கை என 12க்கும் அதிகமான நாடுகளில் இருந்து உபயோகித்த துணிகள் கிடைத்துள்ளன.
தனது இந்த உலக சாதனை குறித்து லக்ஷ்யராஜ் கூறுகையில், “உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள். ஆளும் அரசு உணவிற்கும், இருப்பிடத்திற்கும் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால், உடையின் முக்கியத்துவத்தை அவை மறந்து விடுகின்றன. அதனால் தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஆதரவும், தானமும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி, கிடைத்துள்ள துணிகளை இந்தியா முழுவதிலும் உள்ள தேவைப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்யராஜின் இந்த பிரச்சாரத்திற்கு பிரபலங்களும் பெருமளவில் உதவி புரிந்தனர். இதில், குஜராத்தில் உள்ள ஸ்ரீ கோதல் தம் டிரஸ்ட், இசை மேதைகள் சலீம் - சுலைமான், கிரிக்கெட் வீரர்கள் இர்பான் மற்றும் யூசுப் பதான் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மூன்று மாதம் நடந்த இந்த நீண்ட பிரச்சார பயணத்தில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 120 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆன்லைனிலும் இந்த பிரச்சாரத்திற்கு சுமார் 6 லட்சம் பேர் ஆதரவு அளித்தனர்.
யார் இந்த லக்ஷ்யராஜ்?
லக்ஷ்யராஜ் உதய்பூரில் 1500 ஆண்டுகள் பழமையான மேவார் பிரிவைச் சேர்ந்தவர். இவர் மகாராஷ்டிரா பிரதாப்பின் வம்சாவளியும் ஆவார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் சமூக நலனிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அர்ப்பணிப்புடன் இவர் நடத்தி வருகிறார். உள்ளூர் மக்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விழிப்புணர்வை உருவாக்க பல பிரச்சாரங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். புகழ்பெற்ற ஹெச்.ஆர்.ஹெச். ஹோட்டல் குழுவினை நிர்வகித்து வரும் லக்ஷ்யராஜ், உதய்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications