எழுந்து நில் இந்தியா.. எஸ்.சி., எஸ்.டியினருக்கு பலன்தரும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பலன்தரும் வகையிலான புதிய கடன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக கொண்டு வரப்படுகிற ‘எழுந்து நில் இந்தியா' திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வங்கி கிளையும் தலா 2 திட்டங்களுக்கு உதவும். இதன்மூலம் நாடு முழுவதும் குறைந்தது 2.5 லட்சம் பேர் பலன் அடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெற்று, அதை 7 ஆண்டுகள் வரையில் திருப்பி செலுத்த முடியும்.
மேலும் சர்வதேச தீவிரவாத ஒழிப்பில் இந்தியாவும், பக்ரைனும் ஒத்துழைக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் பல திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.