ரயில் டிக்கெட் மூலம் ஓட்டுக்கு பணம்'- அரசியல் கட்சிகளின் 'அடடே' யோசனை!
டெல்லி : ரயில் டிக்கெட் புக்கிங் மூலம் ஓட்டுக்கு பணம் வழங்கும் புதிய "ஐடியா"வை அரசியல் கட்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன்படி இணையதள புக்கிங்கை பயன்படுத்தி முறைப்படி மொத்தமாக ரயில் டிக்கெட்களை வாங்கிவிடுவார் ஒருவர். குறிப்பாக ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் டிக்கெட்களை புக் செய்து விட்டு, அந்த ரயில் டிக்கெட்களை பலரிடமும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.
அதன் பின்பு அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யச் சொல்லி அதற்கான பணத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக நிதித்துறை புலனாய்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட ஒருவரின் பணம் அரசுத்துறை கணக்கு மூலம் எவ்வித இடையூறும் இன்றி பலருக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிதித்துறை அமைச்சக கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான பணம் இந்த முறையில் மக்களுக்கு அளிக்க முடியாவிட்டாலும், இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்பதால் இவ்வாறு மொத்தமாக இ-புக்கிங் முறையில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களையும், ரத்து செய்யப்படும் டிக்கெட்களையும் தீவிரமாக கண்காணிக்க புலனாய்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி சுமார் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான பணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. டெல்லியில் இருந்து மும்பைக்கு நாள் ஒன்றிற்கு 13 ரயில்கள் வருவதால் ஒரு நாளைக்கு ரூ.50 லட்சம் வரையிலான பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.