அடுத்த துணை ஜனாதிபதி யார்?.. நாளை மாலை தெரியும்!
டெல்லி: இந்தியாவின் அடுத்த துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நாளை நடைபெறுகிறது. நாளை மாலையே முடிவு தெரிய வரும்.
பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடைபெறும். வாக்குகள் நாளை மாலையே எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள், இரு அவைகளின் நியமன எம்.பிக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அவைகளின் மொத்த எம்.பிக்கள் பலம் 790 ஆகும். இதில் சில காலியிடங்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவால் பாஜக எம்.பி. செட்டி பாஸ்வான் வாக்களிக்க முடியாது. லோக்சபாவைப் பொறுத்தவரை மொத்தம் 545 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 281 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 338 பேர் உள்ளனர். 243 பேர் கொண்ட ராஜ்யசபாவில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. 2வது இடத்தில் காங்கிரஸ் உள்ளது.
லோக்சபாவில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி உள்ளது. ராஜ்யசபாவிலும் அதிக எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். எனவே வெங்கையா வெற்றி எளிதானதாக மாறியுள்ளது. காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இரவு 7 மணி வாக்கில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைகிறது. இவர் தொடர்ந்து 2 முறை துணைக் குடியரசுத் .தலைவர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.