பீகார் சட்டசபைத் தேர்தல் நிறைவு: 5ம் கட்டத்தில் 59.46% வாக்குகள் பதிவு -8ம் தேதி வாக்கு எண்ணிக்கை
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அங்குள்ள 243 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், இன்று 57 சட்டசபைத் தொகுதிகளுக்கான 5வது கட்டத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, லோக்ஜன சக்தி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில், 1.5 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். 827 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில், 58 பேர் பெண்கள் ஆவர்.
இன்று நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தேர்தல் நடந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் 8ம் தேதி எண்ணப்படுகிறது. அன்று மாலைக்குள்ளாகவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications