எங்களுடன் மோதினால் அழிக்கப்படுவீர்கள்... பாஜவுக்கு மம்தா பானர்ஜி மறைமுக எச்சரிக்கை!
கொல்கத்தா: பாஜகவுடனான கோபம் மம்தாவுக்கு சற்றும் குறைந்தபாடில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி.
இந்த நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் ட்விட்டரில் தனது பாணியில் வாழ்த்து செய்தியுடன் கூடுதலாக அதிரடி அரசியல் செய்தியையும் சேர்த்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் மம்தா கூறியிருப்பதாவது: " அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. சூரியன் உதிக்கும்போது கதிர்கள் பிரகாசமாக இருந்து பின்னர் மங்கி போகும்.
அதேபோல, ஓட்டு எந்திரத்தை கைப்பற்றி அவர்கள் எவ்வளவு சீக்கிரத்தில் வெற்றி பெற்று பிரகாசமாக உள்ளனரோ, அதே வழியில் அவர்கள் சீக்கிரம் மறைந்து போவார்கள்.
எங்களுடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள். இப்போதைய நிலையில் இதுதான் எங்களது தாரக மந்திரம் என்று தனது ட்விட்டர் செய்தியில் கூறி இருக்கிறார். அதாவது, பாஜகவுக்கு அவர் விடுத்த மறைமுக எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
மேலும், "இந்துக்கள் நம்பிக்கையின் பக்கமும், இசுலாமியர்கள் நேர்மையின் பக்கமும், கிறிஸ்தவர்கள் அன்பின் பக்கமும், சீக்கியர்கள் தியாகத்தின் பக்கமும் நிற்கிறார்கள். இதுதான் எங்களது பாசமிகு இந்துஸ்தான். நாங்கள் இதனை பாதுகாப்போம்," என்று கூறி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான முட்டல், மோதல் இருந்து வருகிறது. அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்தார் மம்தா. பதிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் மம்தாவை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு 22 தொகுதிகளும், பாஜகவுக்கு 18 தொகுதிகளும் கிடைத்தன. பாஜகவுக்கு கணிசமான தொகுதிகள் கிடைத்தது மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
திரிணாமுல் கட்சித் தலைவர்களை இழுக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்தே பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.