கர்நாடக முதல்வர் சித்தராமையா 'கடிகாரத்தில் நேரம்' சரியில்லை!
பெங்களூர்: ரூ.70 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகார விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சித்தராமையா பதவி பறிபோகலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, கையில் கட்டியுள்ள வாட்ச் மதிப்பு ரூ.70 லட்சம் மதிப்புள்ளது என்று மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த சித்தராமையா, நெருக்கடி பலமுனைகளில் அதிகரித்த பிறகு அதுகுறித்து கருத்து தெரிவித்தார். தனது நண்பர் பரிசளித்தது என்று கூறி பிரச்சினையை முடிக்க முற்பட்டார் சித்து. ஆனால், சர்ச்சை தொடர்ந்தது.
இதையடுத்து, அந்த வாட்சை மாநில சொத்தாக அறிவிக்க உள்ளதாக சித்தராமையா அறிவித்தார். ஆயினும், காங்கிரஸ் மேலிடத்திற்கு கோபம் குறையவில்லையாம்.
காங்கிரஸ் உயர்மட்ட தலைவர் ஹரிபிரசாத் கூட, கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதோடு, முதல்வர் மட்டத்திலும் மாற்றம் தேவை என்ற கருத்தை வெளியிட்டார்.
மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இருந்து வந்து காங்கிரசில் இணைந்து குறுகிய காலத்தில் முதல்வர் பதவியை சித்து பெற்றுவிட்டதால், காங்கிரசிலுள்ள மூத்த தலைவர்கள் அவர் மீது கோபத்தில்தான் உள்ளனர். வாட்ச் விவகாரத்தை பெரிதாக்கி மேலிடத்திடம் போட்டுக்கொடுப்பதில் அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.
முதல்வர் ஒருவர் இவ்வாறு கிஃப்ட் என்ற முறையில் வாட்ச் வாங்குவது மோசமான முன் உதாரணத்தை கொடுக்கும் என்பது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்தாக உள்ளது. இதுகுறித்து, மேலிடத்தின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். எனவே சித்தராமையாவை மேலிடம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.