அதிகரிக்கும் பதட்டம்.. அச்சத்தில் கர்நாடகத் தமிழர்கள்.. பாதுகாப்புக்கு ராணுவம் வருமா?
பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவும் தமிழகத்திற்கு சாதகமாக இருப்பதால் கர்நாடகத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பெரும் அச்சம் வேகமாகப் பரவி வருகிறது. 1991ல் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம் போன்று ஏதேனும் ஏற்பட்டு விடாத வகையில் முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப் படைகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1991ம் ஆண்டு கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்றை கட்டவிழ்த்து விடப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் பல லட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்திற்கு அகதிகளாக ஓடிவரும் நிலையும் ஏற்பட்டது. அப்போதும் தமிழகத்தில் ஜெயலலிதான் முதல்வராக இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மிகப் பெரிய அச்சமும் பதட்டமும் கர்நாடகத்தில் நிலவுகிறது. காவிரியில் நீர் திறப்பு குறித்து உச்சநீதிமன்றம் இன்று புதிய தீர்ப்பை அளித்துள்ளது. அதுவும் தமிழகத்திற்கே சாதகமாக அமைந்துள்ளதால் கர்நாடகத்தில் மீண்டும் கொந்தளிப்பு தலை தூக்கியுள்ளது. தமிழக வாகனங்கள், தமிழக பதிவெண்ட கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன.
பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட நகரங்களில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பெங்களூரில் மெட்ரோ ரயில்களை நிறுத்தும் அளவுக்கு நிலைமை போயுள்ளது. பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னடர்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சமும், பதட்டமும் அதிகரித்துள்ளது. தாங்கள் தாக்கப்படுவோமோ என்ற பதட்டமும் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப் படையினரை பாதுகாப்புக்கு நிறுத்தும் நிலை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.