லாலுவுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்: நிதிஷ் உறுதி
சாப்ரா: பீகாரில் மதவாத பாரதிய ஜனதாவை வீழ்த்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துடன் இணைந்து நிற்போம் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் உறுதியளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் 21-ந் தேதி 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக 20 ஆண்டுகளுக்குப் பின்னர் லாலுவும் நிதிஷும் ஒரே மேடையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஹாஜிபூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட இருவரும் நேற்று சாப்ராவில் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:
லாலு பிரசாத் யாதவுடன் சில பிரச்சனைகளால் நாங்கள் விலகி நின்றோம். இப்போது பீகாரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக லாலுவுடன் கை கோர்த்து இருக்கிறோம்.
மத்தியில் மோடி அரசு சர்வாதிகார மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பீகாரில் பாரதிய ஜனதா கட்சிக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்த கூட்டணி நிச்சயம் நல்ல 'மருந்து' கொடுக்கும். பாரதிய ஜனதாவை வீழ்த்த லாலுவுடன் இணைந்து நிற்போம்
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.
இக்கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
மதச்சார்பற்ற சக்திகள் பிரிந்து நின்றதாலே வாக்குகள் சிதறின. ஆனால் அத்தகைய தவறை மீண்டும் செய்ய நாங்கள் தயாராக இல்லை. ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து பாரதிய ஜனதாவின் முன்னேற்றத்தை தடுப்போம்.
பீகாரில் நாங்கள் மொத்தம் 1.60 கோடி வாக்குகளைப் பெற்றோம். ஆனால் பாரதிய ஜனதா அதைவிட குறைவான வாக்குகளைத் தான் பெற்றது. இம்முறை பாரதிய ஜனதாவை நாங்கள் வெல்ல விடமாட்டோம் என்றார்.
இவ்வாறு லாலு பிரசாத் பேசினார்.