பெண்கள் ஜீன்ஸ் அணிவதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
விஜயவாடா: உடை விஷயத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரம் இல்லை என்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆண்கள் பேண்ட், டீ சர்ட் கூட இந்திய கலாச்சார உடை அல்ல என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
விஜயவாடாவில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்று மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியாதாவது,
பெண்கள் மீதான நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் அணியும் உடையை ஒரு காரணமாக சொல்கிறார்கள். ஆண்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் ஜீன்ஸ், டீ சர்ட் போடுவதால்தான் இந்த நிலை ஏற்படுவதாக சிலர் சொல்கிறார்கள். அந்த எண்ணமே தவறு. 50 முதல் 60 வயது பெண்கள் கூட பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள்.
துர்காதேவி உள்ளிட்ட பெண் தெய்வங்களை பூஜிக்கும் அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. பொது இடங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டால் அதனை ஆண்கள் தட்டி கேட்பதில்லை. மவுனமாகி விடுகிறார்கள்.
பெண்கள் விஷயத்தில் பெற்றோர்களும் தங்கள் எண்ணத்தை மாற்ற வேண்டும். வெளியில் செல்லும் தங்கள் மகள்களுக்கு அறிவுரை சொல்லும் அவர்கள் மகன்கள் விஷயத்தில் கூறுவதில்லை. எனவே பெண்கள் மவுனமாக இருக்கக் கூடாது. சுதந்திரமாக செயல்பட்டு தலைமை இடத்துக்கு வர வேண்டும்.
உடை விஷயத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரம் இல்லை என்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆண்கள் பேண்ட், டீ சர்ட் கூட இந்திய கலாச்சார உடை அல்ல. பைஜாமா, ஜிப்பாதான் இந்திய கலாச்சார ஆடையாகும். பெண்கள் ஜீன்ஸ் அணிவதில் தவறில்லை. அது பாதுகாப்பானது.
நான் 10 ஆண்டுகளுக்கு முன் தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்தபோது ஸ்ரீலட்சுமி கொலை பற்றி விசாரிக்க விஜயவாடா வந்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்து உள்ளேன். அப்போது இருந்த நிலையிலேயே இப்போதும் பெண்கள் உள்ளனர். அந்த நிலை மாற வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.